Wednesday 24 April 2013

                                                        என் கவிதை தொகுப்பு
                                                        மழையின் நிறம் பச்சை
                                                            வெளியீட்டு விழா
                                                                  நாள் 31.3.13





Wednesday 2 May 2012

மறைந்த கவிஞர் கந்தர்வன் பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு 
ஆனந்த ஜோதி ஜூலை 2010 இதழில் வெளிவந்தது......



விந்தையான இந்த  புனைப் பெயரைக்கொண்ட திரு நாகலிங்கம் என் வாழ்க்கையில் ஒரு மறக்க இயலாத மனிதர்.  83 முதல் 93 வரை 
பத்தாண்டுகள் அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பை நான் பெற்றேன்.

ஆழமான மார்க்சியப் புரிதலோடு, தொழிற்சங்க மற்றும் இலக்கிய 
இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு போராளி.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உதயமான போது, அதைப் 
புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்த்தெடுக்க அரும்பாடு பட்டவர்.

கவிஞராகவும், நல்ல பேச்சாளராகவும் இருந்த அவருக்கு யாரையும்
எளிதில் வசப்படுத்தும் ஆற்றல் இருந்தது.  மாவட்டக் கருவூலத்தில் 
கண்காணிப்பாளராக இருந்த அவர், அதிகார பேதங்களைக் கடந்து 
வந்து ஒரு கடைநிலை ஊழியரின் தோளில் தன கரங்களைப் போட்டுப் 
பிரியமாகப் பேசுவார்.  அவருக்கு தேநீர் வாங்கிக் கொடுத்து 
தொழிற்சங்க தத்துவங்களைப் போதிப்பார்.  தவறாமல் குடும்ப விசயங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வார்.


"தோழர்" என்ற வார்த்தை அவருக்கு பிடித்தமானது.  வெறுமனே 
ஆணையிட்டுக் கொண்டிராமல் வேலையைச் செய்வதில் முதல் ஆளாக 
இருப்பார். விடிய விடிய போஸ்டர் ஓட்டும் தோழர்களோடு தானும்
இருந்து   அதிகாலை டீக் கடைகளில் எல்லோரோடும் டீக் குடித்து 
விட்டே வீட்டுக்குப் போவார்.

தனது கவிதை, கதை படைப்பாற்றளினால் மாநில அளவில் ஒரு தேர்ந்த 
இலக்கியவாதியாக மலர்ந்தவர்.  த மு எ ச அவருக்கு இன்னொரு கண்.
முதல் முதலாய் ஒரு கவிதை எழுதிக் கொண்டு கூச்சத்தோடு அவரிடம் 
வந்து காண்பிக்கும் ஒரு புதிய படைப்பாளியை மாக்சிம் கார்க்கி,
மாயா காவ்ச்கி பற்றியெல்லாம் கூறி மேலும் எழுத உசுப்பி விடுவார்.


ஒரு சமத்துவ சமுதாயம் பற்றிய கனவு அவருக்குள்ளும் இருந்தது.
அதைப் படைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை தன்னைச் சுற்றி 
இருப்பவர்களிடம் அவரைப் போன்றவர்களால் மட்டுமே ஏற்படுத்த 
முடிந்தது.  அதனால்தான் அவர் மேடைதோறும்,

இருக்கின்றவன் தலைக்கு நெருப்பாக வா..
இல்லாதவன் காலுக்கு செருப்பாக வா..

என்று தன சக தோழர்களை நோக்கி முழங்கினார். 

இயக்கம், இலக்கியம் இரண்டிலும் சாதிக்க விரும்புபவர்கள் கவிஞர் 
கந்தர்வனிடமிருந்து கற்க வேண்டியது ஏராளம்.......







மறைந்த கவிஞர் பாலா பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு 
ஆனந்த ஜோதி மே 2010 இதழில் வெளிவந்தது......




1984.  த மு எ ச (இப்போது த மு எ க ச) இலக்கியக் கூட்டம் ஒன்றிற்கு
என்னைக் கவிதை வாசிக்க அழைத்திருந்தார்கள்.  கூட்டத் தலைமை
கவிஞர் கந்தர்வன்.  கவிதை வாசித்து முடித்ததும் அக்கவிதை 
குறித்து வந்திருந்தவர்கள் கருத்துச் சொல்லிக்கொண்டு வந்தனர்.
"நல்லாயிருந்தது...,  இந்த வரிகள் சிறப்பாக இருந்தன..." என்று 
எல்லோரும் கவிதை குறித்த தங்கள் விமர்சனங்களைச் சொல்லிக் 
கொண்டிருந்த பொழுது பாலாவின் முறை வந்தது.  பாலா சொன்னார்.
"இவருக்குக் கவிதை வரும்..." அவருடைய ஆசியினாலும். த மு எ ச 
தோழர்களின் ஊக்குவிப்பினாலும் தீக்கதிர், செம்மலர் இதழ்களில் 
தீவிரமாக கவிதை, சிறுகதை, கட்டுரை என எழுதிக் கொண்டிருந்தேன்

இயல்பான சினிமா ஆர்வத்தினால் திருச்சி சினி போரம் தோழர்களோடு 
தொடர்பு ஏற்பட்டு அவர்களுடைய திரையிடல்களுக்குச் சென்று வந்தேன்.

1986 இல் புதுக்கோட்டையில் ஒரு திரைப்பட சங்கத்தை நிறுவுவதென 
தீர்மானித்துச் செயலில் இறங்கியிருந்தோம்.  பல தரப்பிலிருந்தும் ஆதரவு.
அப்போது மன்னர் கல்லூரியில், ஆங்கிலத் துறையில் பணியாற்றி வந்த 
கவிஞர் பாலா அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உதவி செய்தார்.  மன்னர் 
கல்லூரி, அருகிலிருந்த பி எட கல்லூரியைச் சேர்ந்த விரிவுரையாளர்கள், 
பேராசிரியர்கள் பலரிடம் என்னைக் கூட்டிக்கொண்டு போய்
அறிமுகம் செய்து வைத்தார்.  உறுப்பினர்கள் சேர்த்துக் கொடுத்தார்.

16 எம் எம் 35 எம் எம் பிரிண்டுகளைக் கொண்டு வந்து ஓட்டல் அரங்கு, 
கல்லூரி அரங்கு, சினிமா தியேட்டர் எனப் பல இடங்களில் நல்ல 
திரைப்படங்களை உறுப்பினர்களுக்கு காட்டி வந்தோம்.

உறுப்பினர்களில் பலர்,   "நாயகன்-நாயகி-காதல்-பாட்டு-நடனம்-வில்லன்-
சண்டை"  என்ற தமிழ் இந்தியின் பார்முலாப் படங்களையே பார்த்துப் 
பழக்கப்பட்டவர்கள்.  

சினிமா என்ற காட்சி ஊடகத்தின் வழியாக, மனிதர்களது 
மெய்யான வாழ்க்கையினை, அவர்களது அசல் உணர்சிகளை, 
நேர்த்தியான காட்சி  அமைப்பில், இசையோடு, படத்தொகுப்பு
உத்திகளோடு, இயல்பான  வசனங்களோடு பார்வையாளன்
முன்வைத்த வித்தியாசமான படங்களை  அப்போதுதான் அவர்கள் 
பார்க்கத் துவங்கினார்கள்.

பலவகைப்பட்ட ஐரோப்பிய, ஆசியத் திரைப்படங்களைக் காண்பித்து
மெல்ல மெல்ல உண்மையான சினிமா எதுவென்று அவர்களை உணர
வைத்தோம்.  சினிமா பார்ப்பது மட்டுமல்லாமல் அது குறித்துப் பேசுவது
விவாதிப்பது திரைப்பட சங்கத்தின் முக்கிய நோக்கம்.  இங்குதான்
கவிஞர் பாலாவின் விமர்சனத் திறன் எங்களுக்குப் பேருதவியாக இருந்தது.
இலக்கிய உலகில் தேர்ந்த விமர்சகராகத் திகழ்ந்த பாலா, திரைப்
படங்களையும் சிறப்பாக விமர்சனம் செய்வார்.  சிறுகதைகளை,
நாவல்களை அடிப்படையாகக் கொண்ட நிறைய பிரெஞ்சு, ஜெர்மன்
சினிமாக்கள் பற்றி அவர்தான் விளக்கிப் பேசுவார்.  சினிமா பற்றிய எங்கள்
அறிவை விசாலப்படுத்தியதோடு, சினிமா அழகியல் குறித்து கற்க
எங்களுக்கு வழிகாட்டினர் என்றே சொல்லலாம்.

ஒவ்வொரு திரைப்படக் காட்சிக்குப் பின்னரும் பாலா என்ன சொல்லப்
போகிறார் என்று நாங்கள் காத்திருப்போம்.  அன்றைய சினிமாவின்
அழகியல்பூர்வமான விசயங்களை, அருமையாக நினைவில் கொண்டுவந்து
உணர்வுபூர்வமாக விவரித்துச் சொல்வார்.  கரகரத்த குரலில் அவர் ஆற்றிய
திறனாய்வு உரைகளை மனதில் அசைபோட்டவாரே  வீடு திரும்புவோம்.

திறனாய்வுத் துறைக்கு கவிஞர் பாலா இன்னும் நிறையச் செய்திருப்பார்.
அவர் உயிரோடு இருந்திருந்தால்.......!

Tuesday 24 April 2012

கிரீஸ் நாட்டு ஆவணப்படமான டெப்டோக்ரசி (DEBT OCRACY) க்கு ஆனந்த ஜோதி மே 2012 இதழில் நான் எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி....

சாதாரண மனிதர்களுக்கு எளிதில் புரியாத பல விசயங்களுள் ஒன்று பொருளாதாரம்.  நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்று யாரையேனும் கேட்டுப் பாருங்கள்,  என்ன பதில் வருகிறதென்று?  சட்டம், மருத்துவம் போன்று பொருளாதாரமும் சாதாரண மனிதர்களின் அறிவு எல்லைக்கப்பால் இருக்கிறது.  சொல்லப் போனால் மெத்தப் படித்த பலருக்குக் கூட நாட்டுப் பொருளாதாரம் குறித்து கடுகளவு ஞானமும் இல்லை. 

பன்னாட்டு நிறுவனங்களின் நிதி மூலதனம் மூன்றாம் உலக நாடுகளை கடன்கார நாடுகளாக்கிச் சுரண்டுவது கடந்த முப்பது ஆண்டுகளாகத் தீவிரமடைந்துள்ளது.  யுரோ ஜோன் என்றழைக்கப்படும் ஐரோப்பிய நாடுகளையும் அது விட்டு வைக்கவில்லை.  இதில் குறிப்பாக கிரீஸ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  கிரிசீன் பொருளாதார வீழ்ச்சி அங்கிருக்கிற எந்த கொழுத்த பணக்கரனையும் பாதிக்கவில்லை.  ஆனால் மக்கள் வாழ்க்கையை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டது. 

அடுத்த வீட்டுக்காரனின் பொருளாதாரத்தில் நாம் தலையிடுவது தேவையற்ற ஒன்று.  ஆனால் நாட்டுப் பொருளாதார த்திற்கும் அதே அணுகுமுறையைக் கையாளலாமா?  நாட்டுப் பொருளாதாரம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்வதும், தேவைப்பட்டால் அதில் தலையிடுவதும் அவசியமான ஒன்று என்பதை இந்த ஆவணப்படம் நமக்கு ஆழமாக உணர்த்துகிறது........

வளர்ந்த நாடுகளுள் ஒன்றான கிரீஸ் இன்றைக்கு ஒரு மூன்றாம் உலக நாட்டைப் போல பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்க்கக் காரணம் என்னவென்று இந்த ஆவணப்படம் விரிவாக அலசுகிறது.......



இந்த ஆவணப்படத்தைப் பார்த்து இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்........

ஆடியன்ஸ் பிலிம் என்று பாராட்டப்படுகின்ற இவ்வாவணப்படம் மக்கள் நன்கொடையாகக் கொடுத்த எட்டாயிரம் யுரோ டாலர்களை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. Aris Hatzistefanou & Katerina Kitidi ஆகிய இருவரும் இணைந்து எழுதி இயக்கியிருக்கிறார்கள்.  இருவரில் ஆரம்பித்து நாற்பது பேர்கள் இப்படத் தயாரிப்பில் இணைந்துள்ளனர்.  இன்டர்நெட்டில் வெளியிடப்பட்ட இப்படத்தை இதுவரை பத்து லட்சம் பேர்கள் பார்த்துள்ளனர்.  கிரீஸ் நாட்டு தொலைகாட்சி நிறுவனங்கள் இப்படத்தைக் கண்டு கொள்ளவே இல்லையாம்............  

Monday 16 April 2012



அழகர்சாமியின் குதிரை 
ஆனந்த ஜோதி இதழில் என் விமர்சனம் 
எழுதப்பட்டது ஜூலை 2011
(அதற்கு விருது கிடைத்திருப்பது என் விமர்சனத்துக்கு கிடைத்த விருதாக எண்ணி மகிழ்கிறேன்)


சமூக அக்கறையும் நல்ல சினிமாவின் மீது கொண்ட காதலினாலும் புதிய தலைமுறை இயக்குனர்களிடமிருந்து ஒவ்வோர் ஆண்டும் சற்று வித்தியாசமான திரைக் கதைகளோடு தமிழ் சினிமாக்கள் வந்து கொண்டிருக்கின்றன.


அவ்வகையில்

தமிழ் சினிமாவின் பாரம்பர்ய பார்முலாவைக் காலில் போட்டு மிதித்தபடி....
இவர்களெல்லாம் நடிச்சாதான் படம் ஓடும் என்ற மூட நம்பிக்கையின் முதுகை முறித்தபடி...... இதெல்லாம் இருந்தாத்தான் போட்ட காசாவது திரும்பி வரும் என்ற இற்றுப்போன வாதத்தின் இடுப்பை ஒடித்தபடி


ஒரு தமிழ் சினிமா வந்திருக்கிறது.  அது அழகர்சாமியின் குதிரை.


வித்தியாசமான கதையோடும்
அழகான படப்பிடிப்போடும்
இனிமையான இசையோடும்
அழுத்தமான செய்தியோடும்


வந்திருக்கிறது அழகர்சாமியின் குதிரை.


மழை பெய்தல் என்பது இயற்கையோடும் அறிவியலோடும் சம்பந்தப்பட்டது என்று தமிழ் நாட்டில் எந்தக் கிராமத்திலும் போய் நீங்கள் சொல்லிவிட முடியாது.  அது அங்குள்ள சாமியின் அருளால் நடக்கிற சம்பவம் என்பது காலங்காலமாக திட்டமிட்டு செய்யப்பட்டு வருகிற ஆத்திகப் பிரச்சாரம். இந்த யதார்த்தத்தை உள்வாங்கிக்கொண்டு அந்தக் கருத்துருவாக்கத்திற்கு அடிமைப்பட்டுப்போன ஒரு கிராமத்தில் இயங்குகிறது கதை.


ஊரில் மழை இல்லை.  அழகர்சாமிக்கு திருவிழா நடத்தினால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையோடு திருவிழா துவங்கி ஒவ்வொரு முறையும் சண்டை, அடிதடி, கொலை என்று திருவிழா நின்று போகிறது.  இம்முறை திருவிழாவை எப்படியும் நடத்தினால்தான் ஊருக்குள் குடியிருக்க முடியும் என்ற வாழ்வா சாவா நிலையில் ஏற்பாடுகள் துவங்குகின்றது.  திடீரென திருவிழாவுக்கு முன்னாள் காணாமல் போகிற அழகர்சாமி கோயில் மரக்குதிரையினால் மறுபடி திருவிழா நின்று போகிறது.


Azhagarsamiyin Kudhirai
"ஊம் .... இந்த வருசமும் திருவிழா நின்னு போச்சு ..." என்றவாறே பிழைப்பைப் பார்க்கப் போகிறார்கள் கிராம மக்கள்.  ஆனால்  ஊர்ப் பெருசுகளோ போலீசைப் பார்க்கப் போகிறார்கள்.  ஒன்னாகப் புகாரளித்துவிட்டு தனித் தனியாய்ப் போய் யார் மீது தங்கள் சந்தேகம் என்று இன்ஸ்பெக்டர் காதில் போடுகிறார்கள்.  என்ன செய்யலாம் என்று ஊர்க்கூட்டம் போட்டுப் பேசுகிறார்கள்.  "ஒங்க சாமியாலேயே தன குதிரையைப் பாதுகாக்க முடியலை..." என்ற இளசுகளின் நக்கலுக்கிடையே மலையாள மாந்த்ரீகனை அழைத்து மை போட்டுப் பார்க்க முடிவாகிறது.  மலையில் மூட்டை தூக்கப் பயன்படும் ஒரு நிஜக் குதிரை வழிதவறி ஊருக்குள் வர மலையாள மாந்த்ரீகன் புளுகில் ஊரார்கள் மயங்கி இது அந்த அழகர்சமியே அருளிய வாகனம் என்று குதிரையைப் பிடித்து வைத்துக்கொள்கிறார்கள்.


குதிரையின் சொந்தக்கார இளைஞன் (அவன் பெயரும் அழகர்சாமி) குதிரையைக் கேட்டு வருகிறான்.  ஊரார்கள் தர மறுக்கிறார்கள்.  அவனுக்கும் ஊரார்களுக்கும் ஏற்படும் சண்டையில் போலீஸ் தலையிடுகிறது.  திருவிழா நாள் நெருங்க நெருங்க பிரச்சினை முற்றி குதிரைக்கார இளைஞனின் உயிருக்கே ஆபத்தாகிறது.  பின் மரக்குதிரையைத் திருடியவன் அதை தானே கோயிலில் சென்று வைத்துவிட பிரச்சினைகள் ஓய்ந்து ஒருவழியாய்த் திருவிழா நடக்கிறது.


கிராமிய மணத்தோடு கூடிய இந்தக் கதையை வைத்துக்கொண்டு இயக்குனர் சுசீந்த்திரன் ஒரு அற்புத சினிமாவைப் படைத்திருக்கிறார்.  


அழகர்சாமி கோயில் திருவிழா நடைபெறாமல் இருக்க ஒரு அரசியல் காரணம் இருக்கிறது என்பதைத் துளியும் அறியாத, படிப்பறிவற்ற, வெள்ளந்தியான கிராம மக்கள் தங்களின் வறிய வாழ்க்கைக்கும் அழகர்சாமியின் மீதான (பயம் கலந்த) பக்திக்கும் இடையே அ லைபாய்வதை நிதர்சனமாகப் படைத்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.  பக்தியை விட வறுமை பெரிதாகிவிட்ட நிஜ வாழ்க்கையின் கோரங்களை கோடங்கியின் மனைவி பாத்திரம் மூலம் ஆவேசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.  அழகர்சாமி கதாபாத்திரம் அழகு, சிவப்பழகு என்ற நுகர்வோர் கலாசாரப் பைத்தியக்காரத்தனத்துக்கு இயக்குனர் சுசீந்திரன் அடித்திருக்கிறார் சம்மட்டி அடி.


அவன் இவன் என்று சகட்டு மேனிக்குப் பேசும் அந்தக் கறாரான இன்ஸ்பெக்டர் பாத்திரம் அதிகார வர்க்கத்தின் மாதிரிப் படைப்பு.  ஊர்ப் பெருசுகளின் ஆத்திக வெறிக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட  குதிரைக்காரனின் பக்கம் உறுதியாக நிற்க முடியாமல் தவிப்பது அருமையாகப் பதிவாகியுள்ளது.


திருமண நிச்சயத்தில் மலரும் அந்தக் கருப்பு சிவப்பு நிறக் காதலர்களின் காதல் அந்த மலைகளைப் போலவே அழகாகவும், உறுதியாகவும் நிறைவேறுகிறது.  இன்னொரு பக்கம் கலியாணத்தில் முடியும் மேல்சாதி கீழ்சாதிக் காதலும் திரைக்கதைக்கு உள்ளேயே நெய்யப்பட்ட கவித்துவப் பின்னல்.  ஆத்திகம் பேசி அடாவடி செய்யும் மூத்த தலைமுறையும் அதனை ஒன்றும் செய்ய இயலாமல் ஓரமாய் நின்று புலம்பும் இளைய தலைமுறையும் படு யதார்த்தம்.  ஆனாலும் உரிய நேரத்தில் தலையிட்டு தங்கள் பொறுப்பை சரியாக நிறைவேற்றுகிறது அந்த இளைய தலைமுறை.




மேல்சாதி இளைஞன், கீழ்சாதி பெண் காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.  மேல்சாதி இளைஞனின் தந்தையும் ஊர்ப் பிரசிடெண்டுமான நாயக்கர் இந்த ஊரில் இனிமேல் மழையே பெய்யாது; பெய்யக்கூடாது என்று கூவும் வேளையில் மழை பிய்த்க்கொண்டு கொட்டும் அந்த கிளைமாக்ஸ் காட்சி சாமிக்கும், சாதிக்கும் சாட்டையடி கொடுக்கும் முடிவு.  எழுந்து நின்று கைதட்ட வைக்கும் முடிவு.


பாஸ்கர் சக்தியின் எழுதப்பட்ட ஒரு கதையை திரையில் பார்த்துப் பரவசப்ப்படும்படி காட்சியாய்ப் படைத்திருக்கும் சுசீந்திரன் குழுவினருக்கு நல்ல தமிழ் சினிமா ரசிகர்களின் சார்பில் பாராட்டுக்கள்...நன்றிகள்..!

Saturday 14 April 2012

திரைப் பூக்களை தேடி அலைந்த
ஒரு தேனீயின் அனுபவங்கள்

Friday 13 April 2012

வாசித்த கவிதைகளில் நேசித்த வரிகள்....
பெயர் மறந்து போன படைப்பாளிகளுக்கு நன்றி 


புதுக் கவிதை
மொழிபெயர்ப்பு

குங்குமம்
குருதிச் சந்தனம்
அந்தியின் நிறம்
புலி கொன்ற மானின் ரத்தம்
பறக்கவிட்ட சிவப்புக் கொடி
காளி கண்களின் ஜ்வாலை
கல்கத்தா காளியின் நாக்கு
புதுக் கவிதைக்கு
இதெல்லாம் வேண்டுமப்பா


அது
தான் இயங்குவது
மற்றவரை இயங்கவைப்பது


அது
மாற்றம் கொண்டது
மாற்றவும் வல்லது


அது
பாடுவது
பாடவும் வைப்பது


எது
வாழ்வின் முழுமையை
வழங்க வல்லதோ

அதுதான் புதுக் கவிதை..!








(1)
அவன்
ஒரு பட்டுவேட்டி பற்றிய
கனாவிலிருந்த போது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது 
              


(2)
இந்தியா 
சுதந்திர நாடு
.....................................
அடடா
வதந்திகளைப் பரப்புவதில்
இந்தியர்கள் வல்லவர்கள்
இவர்கள் இன்னமும்
தென்னந் தோப்பினுள்
நம்பிக்கையோடு
மாங்காய் தேடுகிறார்கள்





(3)
நீ 
சேரிகளில் மட்டுமே
யாத்திரை செய்வாய்
என்பதைத் 
தெரிந்து கொண்டதால்
உன்னை நேசித்தவர்கள்
தேசத்தையே
சேரியாக மாற்றிவிட்டார்கள்




(4)
வன்முறை கூடாது
என்று உபதேசித்தவர்கள்
வாயிலிருந்து தெறித்தது
எச்சில் அல்ல
என் தோழனின் ரத்தம் 



(5)
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம் வாங்கிக் கொண்டு
ஓடிவிடுவார்கள்
தீட்டுக்கரை படிந்த
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச் சந்தையில்
சகாயமாய்க் கிடைக்கின்றது 
இச்சையைத் தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது 
கால் நீட்டி தலை சாய்க்க 
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது
திறந்த வெளிக்காற்று
யாருக்குக் கிடைக்கும்
எங்களுக்கு கொடுப்பினை இருக்கிறது
எதுவும் கிடைக்காத போது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகி விடுகிறது
எங்களுக்கு ஒருகுறையும் இல்லை
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம் 



(6)
திருஞான சம்பந்தரைத்
தேடித் பிடித்து 
பால் புகட்டிய
பராசக்தி
சென்னை நகரத்
தெருவோரம் கிம்பந்தன்'
பசித்தழும்போது
கைப்புறம் ஏந்திக் 
கச்சவிழ்ப்பாளா ?



(7)
ஏழைகளின் அடுப்பெரிப்போம்
இல்லையெனில் சூரியனில்
தீக்குளிப்போம் 



(8)
குழந்தைகளின் பசியை
நாங்கள் அறிந்ததில்லை
ஏனெனில் 
நாங்கள் பசியின் குழந்தைகள் 



(9)
நாங்கள் 
நிர்வாணத்தை  விற்றோம்
ஆடை வாங்குவதற்காக



(10)
சுதந்திரத்தை 
என்னால்
சாப்பிட முடியவில்லை
சோறு கொடு 



(11)
வானத்து நிலவை 
வெள்ளி அப்பமென்று
வருணித்து விட்டு
திரும்பிய போது
அடுப்பு மேசையில் 
வெள்ளைப் பூனை 
ஆழ்ந்த உறக்கதிருந்த்து 



(12)
புல்புல் பறவைகளைப் 
பாடியது போதும்
கவிஞர்களே
பூமிக்கு வாருங்கள்..!



(13)
ஆர்யபட்டா 
வானத்தைக் கிழித்தது 
அணுகுண்டு சோதனை
பூமியைக் கிழித்தது 

அரைக்கை சட்டைகள்
கிழிந்தது மட்டுமே
மனதில் நிற்கிறது ..!



(14)
உயர்ந்தவன் யார்?
நகரவாசியா?
கிராமவாசியா ?
இல்லை விலைவாசி...!



(15)
உயர உயரப் பறந்தாலும்
விலைவாசி
பருந்தாகுமா ?


(16)
காக்கா காக்கா 
கண்ணுக்கு
இலவச மை கொண்டு வா 



(17)
எனக்கும் தமிழ்தான்
மூச்சு
அனால் அதைப்
பிறர்மேல் விடமாட்டேன்





(18)
எங்களால்
மனிதர்களை மந்திரிகளாக்க
முடிகிறது ஆனால்
மந்திரிகளைத்தான் 
மனிதர்களாக்க முடியவில்லை



(19)
தாயே
எனைத் தூங்க வைக்கும்
பாட்டை விடுத்து
விழிக்க வைக்கும் பாட்டை
எப்போது நீ
பாடப் போகிறாய் ?



(20)
கடவுளைத் தேடி கோயிலுக்குப் போனோம் 
கோயில் பூசாரி போலீசுக்குப் போனார்  





(21)
மழை இல்லாவிடில்
வறட்சி
தனது பிறந்த நாளை
குளம் குட்டைகளில்
கேக் வெட்டி
கோலாகலமாய்க கொண்டாடும் 





(22)
தேர்தல் முடிந்து விட்டதே
இன்னும் என்ன கியூ 
ஓ..... ரேசன் கடை 
ஐந்து ஆண்டுகள்
அரிசி கோதுமை சர்க்கரைக்காக
வரிசையில் நிற்க வேண்டிய 
அவசியத்துக்கு 
ஓட்டுப் போடா கியூவில் நிற்பது
ஒரு ஒத்திகைதான் 
தினம் தினம்
ரேசன் கடைக் கியூவில் நின்ற
அலுப்புத் தீர 
வாரம் ஒருமுறை
சினிமா கியூவில் 
சிரித்துக் கொண்டே நிற்கும்
தாய்க்குலம் 

ஒரு கியூவில் நின்று
செய்த தவறுக்குத் தண்டனை
இன்னொரு கியூவில்தான்
வழங்கப்படுகிறது...!



(23)
சம்பளக் கவரை
பிரித்ததும் உள்ளே
ஈன்ற தாயின் இருமல் சத்தம் ...



(24)
என்னுடைய சம்பள நாளில்
எண்ணி வாங்குகிற
பளபளக்கும் நோட்டுக்களில்
எவரெவர் முகமோ தெரியும்
என் முகம் தவிர ...


(25)
என்ன கேட்டாய்
உன் வீட்டில்
என்ன செய்தாய்?
எதெடுத்து என்ன பார்த்தாய்?
எதைக் கிழித்து
வாங்கிக் கொண்டாய்
அடி உதைகள்
கெட்டுப்போன பிள்ளைக்கு
வெளியில் கிடைக்கும்
அடி உதைகள்
கெட்டுப் போகா பிள்ளைக்கு
வீட்டில் கிடைக்கும் முன்கூட்டி


அவர்கள் அவர்கள்
பங்குக்கு
உதைகள் வாங்கும்
காலத்தில்
உனக்கு மட்டும்
கிடைத்தாற்போல்
சின்னக் கண்ணா
அலட்டாதே.....


(26)
மொழி பெயர்ப்பு


நாங்கள் பாடும் மீன்கள்
நிறையத் தடவை வலைகளைக் கிழித்திருக்கிறோம்
அப்புறம் விருந்து மேசைகளில் பரிமாறப்ப்பட்டிருக்கிறோம்
நாங்கள் எவ்வளவு சுவையானவர்கள்....!
ஆனால் எங்கள் பாடல்களில் எலும்புகள் உண்டு
உங்கள் தொண்டையை
அடைத்து விடுவதற்கு ஒருநாள் வருவோம் ...!




(27)
படி
வேலை தேடு
மணந்து கொள்
குழந்தை பெறு
குடும்பத்தோடு
சினிமாவுக்குப் போ
சொத்து சேர்
சுகமாயிரு
அடுத்தவனுக்காக
அலட்டிக் கொள்ளாதே
உனக்குக் கஷ்டமா
நொந்து கொள்
மூச்சு விடாதே
தவறினால்
நீ
தறுதலை....


(28)
அவர்கள் போட்ட மாலைகளை
நான் மேடையிலேயே
விட்டு விட்டு வந்தேன்
என் பாடல்களை
அவர்கள் பத்திரப்படுத்தினார்கள்




(29)
நிலவே உன்னிடமிருந்து
வெளிநாட்டவர்கள்
கல்லெடுத்து வருகிறார்கள்
நாங்களோ இன்னமும்
அரிசியிலேயே கல்லெடுத்துக்
கொண்டிருக்கிறோம்...




(30)
பாதை முள்
படுக்கை முள்
இருக்கை முள்
ஆன மனிதர்களைப்பார்த்து
சிலிர்த்துக்கொண்டது
முள்ளம்பன்றி..
ஒ....
இவர்களுக்குத் தெரியாதா
முள்ளும் ஓர் ஆயுதமென்று..?




(31)
வாழ்வின் மடியிலிருந்து
சருகுகளாய் உதிர்வதை விட
மரணத்தின் மடியிலிருந்து
விதைகளாக சிந்தலாமே..?


(32)
பேனாக்களே
கிரீடங்களைக் கழற்றிவிட்டு
தலை குனியுங்கள்
நீங்கள் இருப்பது
தாள்களுக்காக -
பைகளுக்காக அல்ல


(33)
அடித்தளத்தை உலுக்கும்
பாட்டாளிப் புரட்சியில்லாமல்
எந்த
டோட்டல் புரட்சியும்
இந்த
சமூக முனை மயிரைக்கூட
அசைக்காது..


(34)
அக்கா அக்கா என்று அழைத்தால்
அக்கா வந்து கொடுக்கச்
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே ...?


(35)
இந்த இரவின்
நட்சத்திரங்கள்
எங்கே போச்சு?
இந்த மரத்தின்
பூக்களெல்லாம்
ஏன் கருகிற்று?
கண்களுக்கு
இரண்டு நாள் பட்டினியை
ஜீரணிக்க முடியவில்லையோ?


(36)
எதனை கற்களை
என்  காலிடறிற்று?
ஒன்றிலேனும்
அகலிகை அகப்படவில்லை
என் பெயரும் இராமன்தான்...!



(37)
காளியம்மா காளியம்மா
ஏன் நாக்கை நீட்டுகிறாய்
நான் என்ன டாக்டரா?



(38)
நாங்கள் வெயிலை தாங்குவது
எப்படித் தெரியுமா?
வெயிலில் பொசுங்கி
நாங்கள் மழைக்கு ஒதுங்குவது
எப்படித் தெரியுமா?
மழையில் நனைந்து
நாங்கள் பசியை விரட்டுவது
எப்படித் தெரியுமா?
பட்டினி கிடந்து
நாங்கள் நோயை ஒழிப்பது
எப்படித் தெரியுமா?
செத்துத் தொலைந்து
நாங்கள் யார் தெரியுமா?




(39)
நிலா
விட்டெறிந்த இட்டிலியோ
கட்டிவைத்த பழஞ்சோறோ
கொட்டி வைத்த கப் தயிரோ
சுட்டு  வைத்த அப்பளம்தானோ
என்ன இழவேயானாலும்
கிட்ட வந்து எட்டவில்லை
பாடுபட்ட பாட்டாளி
கொட்டாவி விடுகின்றேன்


(40)
விடுதலை
எங்கள் விலங்குகள்
கழற்றப்படவில்லை
சாவிகளதாம்
கைமாறின...




(41)
கடவுள்
உலகக் கட்டிடத்தை
கோணலாகக் கட்டிய
அனுபவமற்ற கொத்தனார்




(42)
தேசத்திற்கு நாம் கிடைத்து விட்டோம்
ஆனால் இன்னும்
தேசம் நமக்குக் கிடைக்கவில்லை




(43)
கரடி
சைக்கிள் விடும்போது
நாம்
வாழ்க்கையை
அர்த்தப்படுத்த முடியாதா?


(44)
கனவுகளையல்ல
யதார்த்தத்தை
காதலிக்கக் கற்றுக்
கொள்வோம் முதலில்
வானமும்
சந்திர சூரியனும்
எங்கேயும் போய் விடாது
வாழ்க்கைதான்
ஓடி ஒளிந்துகொள்ளும்




(45)
புரட்சி என்பது
பொதுமக்களின் திருவிழா
என்ற நெருப்பு வரிகளை
நினைவுபடுத்திக்கொள்
ஒப்பாரி வைப்பதற்கு
நாம் ஒன்றும் கூடவில்லை
மாரடிப்பவர்களே
வழியை விட்டு விலகுங்கள்
ஓலமிடுபவர்களே
ஓரம் போங்கள்


(46)
காதலியை விட்டுக் கொடுத்தைப்போல
தேசத்தை விட்டுக்கொடுக்க முடியாமல்
நான் நிமிரக் காரணம் உண்டு
எனக்கு இருப்பது ஒரே தேசம்..!


(47)
பாரதத்துக்கு
மூன்று புறம் கடல்
நான்கு புறம் கடன்..!


(48)
சந்திரனை தொட்டதின்று மனித சக்தி
சரித்திரத்தை மீறியது மனித சக்தி
இந்திரன்தான் விண்ணாட்டின் அரசனென்ற
இலக்கணத்தை மாற்றியது மனித சக்தி


(49)
கத்தும் பறவை
கனி மரத்தில் வந்து
ஒற்றுமை காட்டிடுதே - தலை
பித்தம் பிடித்தொரு 
கூட்டம் தனித்தனி 
பேதம் வளர்த்திடுதே 


(50)
கொடுமையையும் வறுமையையும் 
கூடையிலே வெட்டி வை
கொஞ்சநஞ்சம் பயமிருந்தா 
மூலையிலே கட்டி வை
நெடுங்கவலை தீர்ந்ததென்று 
நெஞ்சில் எழுதி ஒட்டி வை
நெருஞ்சிக்காட்டை அழித்து - அதில்
நெல்லு விதையைக் கொட்டி வை 


(51)
உச்சி மலையிலே ஊரும் அருவிகள்
ஒரே வழியிலே கலக்குது
ஒற்றுமையில்லா மனிதகுலம்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது 


(52)
சேசு முகம்மது என்றும்
சிவனென்றும் அரியென்றும் 
சித்தார்த்த னென்றும் 
பேசி வளர்க்கின்ற போரில் - உன்
பெயரையும் கூட்டுவர் - நீ
ஒப்ப வேண்டாம் ...




(53)
மனிதரில் நீயுமோர் மனிதன் - மண்ணன்று 
இமை திற எழுந்து நில் 
தோளை உயர்த்து 
சுடர்முகம் தூக்கு 
மீசையை முறுக்கு மேலே வந்து 
அறிவை விரிவு செய் 
அகண்டமாக்கு - மக்களை
அணைந்து கொள்
உன்னைச் சங்கமமாக்கு 
மானுட சமுத்திரம் நானென்று கூவு ...


(54)
காடுமேடுகளைச் சீர்திருத்தியே - நல்ல
கழனிகளாக்கியதாரு
கண்ணீரில் பயிர் வளர்த்தே 
காசீனிககீந்தது யாரு 
வயிறு புடைக்கத் தின்று 
மாடியிலே உறங்கும்
மனிதர்களே இதைக் கேளீர் ...


(55)
மழைகூட ஒருநாளில் தேனாகலாம் 
மணல்கூட சில நாளில் பொன்னாகலாம்
ஆனாலும்  அவையாவும் நீயாகுமா?
அம்மாவென்றழைக்கிற சேயாகுமா?

விண்மீனும் கண்ணே உன் கண்ணாகுமா?
விளையாடும் கிளி உந்தன் மொழி பேசுமா?
கண்ணாடி உனைப்போல கதை கூறுமா?
இரு கை வீசி உலகாளும் மகனாகுமா?


(56)
எங்கள் அம்மணத்திலிருந்து 
உங்கள் பார்வையை மாற்றவே 
கைதோறும் கொடி




(57)
அன்று அவன் 
சம்பள நாள்
கணக்குப் பார்த்தான் 
கடன்கள் போக
மீதியிருந்தவை
கடன்கள் 


(58)
வெற்றி உன்னை
அடுதவர்க்கெல்லாம்
அறிமுகப்படுத்தும்
தோல்வியோ 
உன்னையே உனக்குள்
ஒருமுகப்படுத்தும்..


(59)
144 எதன் வர்க்கம்
என்று கேட்ட 
ஆசிரியருக்கு 
12 என்று பதில் சொல்ல
எழுந்த மாணவன்
யோசித்து விட்டுச் 
சொன்னான்
'அதிகார வர்க்கம்'




(60)
இங்கே வியாபாரம் செய்ய வந்தார்கள்
அரசியல் நடத்தினார்கள்
அரசியல் செய்ய வந்தவர்கள்
வியாபாரம் நடத்துகிறார்கள் 


(61)
போர்வையில்லா 
ராப்பிச்சைக்காரன்
குளிர் காய்கிறான்
வயிற்று நெருப்பில் 


(62)
உடலைக் கசக்கி
உதிர்த்த வியர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
இவ்வுலகு 
உழைப்போர்க்கென்பதை




(63)
அரசே
பரிசுச் சீட்டு 
விற்பவனுக்கு 
பாரத ரத்னா
பட்டம் கொடு
அவன் மட்டும்தான்
எல்லா மாநிலங்களையும்
இணைத்து வைத்திருக்கிறான் 




(64)
உழைப்பாளிகள் இந்த தேசத்தில்
சிலைகளில் கூட
உழைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள் 
தலைவர்கள் இந்த தேசத்தில்
சிலைகளில் கூட
பேசிக் கொண்டுதானிருக்கிறார்கள் ..


(65)
சிறுகச் சிறுக
மரத்தை நாமும்
நம்மை மரமும்
அழித்துக்கொள்வோம் 
ஒருதினம் இருவரும்
மறைந்து போக
மிச்சமிருக்கும் இக்
கவிதை மட்டும்  


(66)
கடைசி வரிசையில்
சோகத்தோடு 
சர்க்கஸ் கோமாளியின் மனைவி 



(67)
விருந்தாளி பையில் திராட்சை 
நீண்ட பேச்சு 
உறங்கிப்போனது குழந்தை 


(68)
குடிப்பவன் நேரடியாக
சொர்க்கத்துக்குப் போகிறான் 
முல்லாக்கள் குடிப்பதை
எதிர்த்து வருகிறார்கள்
காரணம் வேறொன்றுமில்லை 
முல்லாக்களுக்குத் தெரியாமல்
யாரும் சொர்க்கத்துக்குப் 
போய்விடக்கூடாது 
எனவே யாரும் குடிக்கக்கூடாது ..!


(69)
எத்தனை முறை செத்தாலும்
எழுப்பித் தொலைக்கிறானே 
வாக்குச் சாவடிக்கு..!



(70)
எனக்குச் சம்மதமே
நீ
மாலையாய் இருப்பின்
அதில் நான்
மலராய் இருக்க மட்டுமல்ல
நீ பாலையாய் இருப்பின்
அதில் நான்
மணலாய்க் கிடக்கவும்


(71)
மரங்களுக்கு உயிர் உண்டு
என்றபோதிலும்
அவை வெட்டப்படக்கூடாதென்று
நான் சொல்ல மாட்டேன்

இலைகள்
இயற்கைக்கு எழில் கூட்டுகின்றன
இருந்தாலும்
அவை கிள்ளப்படக்கூடாதென்று
நான் சொல்ல மாட்டேன்

கிளைகள்
மரங்களின் கரங்கள்தான்
என்றபோதிலும்
அவை முறிக்கப்படக்கூடாதென்று
நான் சொல்ல மாட்டேன்

ஏனெனில் ........
எனக்கு
ஒரு குடிசை வேண்டும்


(72)
மைதானமெங்கும் மொய்க்கும்
விளையாட்டுக் கூட்டங்கள்
குறுக்கும் நெடுக்குமாய்
கிரிக்கெட் ஆட்டங்கள்
பறக்கும் தட்டுக்களை
துரத்தும் சிட்டுக்கள்
தண்டால் பஸ்கி ஆசனம்
செய்து
கண்ணாடி பார்க்கும்
இளைஞர்கள்
புழுதி படர்ந்த புன்னைகையோடு
கில்லிதாண்டும் சிறுவர்கள்

அத்தனையும் பார்த்தபடி
டியூஷன் போய்க்கொண்டிருக்கும்
சமர்த்துப் பையன்கள்....


(73)
பெருமாள் கோயிலின் முன்
ஏராளமான
பிச்சைக்காரர்கள்
மசூதிகளின் முன்பு
முண்டியடித்தபடி
முசாபர்கள்
மாடி வீடுகளில்
மகிழ்ச்சி குறையாமல்
வாழ்பவர்கள் தமககுள்
வாதிடுகிறார்கள்
ராமர் கோயிலா
பாபர் மசூதியா?


(74)
தனியொரு மனிதன்
பசித்துக் கிடந்தால்
ஒருவர்க்கும் சொல்லாமல்
உடனே நின்று போகும்
ஒரு பூமி வேண்டும்




(75)
கிராமம் நாட்டின்
முதுகெலும்பாம்
அதனால்தான்
கிராமத்தை
அரசாங்கத்தால்
திரும்பிப் பார்க்க
முடியவில்லையோ ?


(76)
மாங்கல்யத்தின் மகிமையை
மனைவி அறிவாள்
மணாளன் அறிவான்
அவர்கள் இருவரையும் விட
மார்வாடியே
அதிகம் அறிவான்


(77)
வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரானே...!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வார்..?


(78)
என்ன வரம் வேண்டும்
என்கிறார் கடவுள்
அது தெரியாத
நீர் என்ன கடவுள்?


(79)
நகைகளை விற்று
வீடு கட்டினேன்
புன்னகை இல்லம்




(80)
கேட்க கேட்க
எவ்வளவு இனிமை
உலை கொதிக்கும் சத்தம்


(81)
சன் டிவி
ஸ்டார் டிவி
எவ்வளவு வந்தாலும்
இன்னும் பலருக்கு
மதிய உணவு
பன் டீதான் ...!




(82)
கல்வி இங்கே
இதயத்தில் சுமக்கும்
இனிமையாய் இல்லாமல்
முதுகில் சுமக்கும்
மூட்டையாகி விட்டது
கொடுமை என்னவென்றால்
குழந்தைகளெல்லாம்
கூனிகளாயினர்




(83)
விதையைப் போல
தூவப்பட வேண்டிய அறிவு
ஆணியைப்போல
அறையப்படுகிறது


(84)
மொழிபெயர்ப்பு

ஓ மனுஷ குமாரனே
உன் வாழ்க்கை
மகிமை கொண்டதே
மாட்டுக் கொட்டிலில்
பிறந்தாய்
அற்புதம்
மரச் சிலுவை சுமந்து
மரித்தாய்
அற்புதம் ! அற்புதம் !

ஏனிந்த அறியாமை
எதற்காக மீண்டும்
உயிர்த்தெழுந்தாய்?


(85)
மொழி பெயர்ப்பு

மாதர் சூடுவர்
எனக்கு மகிழ்ச்சியில்லை
ராஜாக்களின் போகத்தில்
சந்தோசமில்லை
மதவெறியூட்டும் கற்சிலைகளின்
பூசைக்குப் போகிறேன்
அதிலும் திருப்தியில்லை
தேனீ என்னைச் சுற்றி வருகிறது
சுகமில்லை

விடுதலைக்காக இறந்த
வீரர் கல்லறையில் விழுகிறேனே
அப்போதுதான்
பிறந்த பயனைப் பெறுகிறேன் ...!


(86)
ஒரு முறை
வாழ்வதற்காக
ஒருவன்
எத்தனைமுறை
சாக வேண்டியிருக்கிறது...?


(87)

என் மகன்
பிரசவ் விடுதியிலிருந்தே
ஆங்கிலம்
கற்றாக வேண்டும்

அதனால் நான்
என் மனைவியின்
பிரசவத்தை
இங்கிலாந்தில்
வைத்துக்கொள்ள
ஏற்பாடு செய்து விட்டேன் !



(88)
புத்துணர்வு பெறுவதென்னாள்?
புரட்சிக்குயிர் தருவதென்னாள்?
புயலாய் எழுவதென்னாள்?
புரட்டுலகை தீர்ப்பதென்னாள்?
புத்துலகுப் பொதுவுடைமை
புதுக்கும் நாள் என்னாள்?
புரட்டு முதலாளியத்தை
போக்கும் நாள் எந்நாளோ ?