Wednesday 2 May 2012

மறைந்த கவிஞர் கந்தர்வன் பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு 
ஆனந்த ஜோதி ஜூலை 2010 இதழில் வெளிவந்தது......



விந்தையான இந்த  புனைப் பெயரைக்கொண்ட திரு நாகலிங்கம் என் வாழ்க்கையில் ஒரு மறக்க இயலாத மனிதர்.  83 முதல் 93 வரை 
பத்தாண்டுகள் அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பை நான் பெற்றேன்.

ஆழமான மார்க்சியப் புரிதலோடு, தொழிற்சங்க மற்றும் இலக்கிய 
இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு போராளி.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உதயமான போது, அதைப் 
புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்த்தெடுக்க அரும்பாடு பட்டவர்.

கவிஞராகவும், நல்ல பேச்சாளராகவும் இருந்த அவருக்கு யாரையும்
எளிதில் வசப்படுத்தும் ஆற்றல் இருந்தது.  மாவட்டக் கருவூலத்தில் 
கண்காணிப்பாளராக இருந்த அவர், அதிகார பேதங்களைக் கடந்து 
வந்து ஒரு கடைநிலை ஊழியரின் தோளில் தன கரங்களைப் போட்டுப் 
பிரியமாகப் பேசுவார்.  அவருக்கு தேநீர் வாங்கிக் கொடுத்து 
தொழிற்சங்க தத்துவங்களைப் போதிப்பார்.  தவறாமல் குடும்ப விசயங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வார்.


"தோழர்" என்ற வார்த்தை அவருக்கு பிடித்தமானது.  வெறுமனே 
ஆணையிட்டுக் கொண்டிராமல் வேலையைச் செய்வதில் முதல் ஆளாக 
இருப்பார். விடிய விடிய போஸ்டர் ஓட்டும் தோழர்களோடு தானும்
இருந்து   அதிகாலை டீக் கடைகளில் எல்லோரோடும் டீக் குடித்து 
விட்டே வீட்டுக்குப் போவார்.

தனது கவிதை, கதை படைப்பாற்றளினால் மாநில அளவில் ஒரு தேர்ந்த 
இலக்கியவாதியாக மலர்ந்தவர்.  த மு எ ச அவருக்கு இன்னொரு கண்.
முதல் முதலாய் ஒரு கவிதை எழுதிக் கொண்டு கூச்சத்தோடு அவரிடம் 
வந்து காண்பிக்கும் ஒரு புதிய படைப்பாளியை மாக்சிம் கார்க்கி,
மாயா காவ்ச்கி பற்றியெல்லாம் கூறி மேலும் எழுத உசுப்பி விடுவார்.


ஒரு சமத்துவ சமுதாயம் பற்றிய கனவு அவருக்குள்ளும் இருந்தது.
அதைப் படைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை தன்னைச் சுற்றி 
இருப்பவர்களிடம் அவரைப் போன்றவர்களால் மட்டுமே ஏற்படுத்த 
முடிந்தது.  அதனால்தான் அவர் மேடைதோறும்,

இருக்கின்றவன் தலைக்கு நெருப்பாக வா..
இல்லாதவன் காலுக்கு செருப்பாக வா..

என்று தன சக தோழர்களை நோக்கி முழங்கினார். 

இயக்கம், இலக்கியம் இரண்டிலும் சாதிக்க விரும்புபவர்கள் கவிஞர் 
கந்தர்வனிடமிருந்து கற்க வேண்டியது ஏராளம்.......







No comments:

Post a Comment